பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காட்டில் 2.5 கிலோ கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி, பாலக்காடு ரயில் நிலையப் பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும் விதத்தில் நடந்துகொண்ட ஒரு பெண்ணை நிறுத்தி விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த பையைச் சோதனையிட்டபோது, அதில் 2.5 கிலோ கஞ்சா எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையில், அவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்துஜா (29) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை உடனடியாகக் கைது செய்து கஞ்சா எண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு பாலக்காடு இரண்டாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இறுதி விசாரணையைத் தொடர்ந்து, பெண்ணுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி டி.சுதீர் டேவிட் தீர்ப்பளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
முன்னதாக, இவ்வழக்கு நடந்துகொண்டிருந்தபோது பிணையில் வெளியே வந்த சிந்துஜா, நிபந்தனைகளை மீறி மீண்டும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரியில் அவர் மீது மற்றொரு வழக்கும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

