சென்னை: திமுகவினர் எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சமாட்டார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருவதாக சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
பாஜகவினர் பொய்களையும் வதந்திகளையும் பரப்புவதோடு அதை உண்மையாக்க வரலாற்றையே மாற்றுவதாகவும் முதல்வர் சாடினார்.
“75 ஆண்டுகளில், நமது கொடி மாறவில்லை. சின்னமும் மாறவில்லை. நமது எதிரிகள் வலிமை வேண்டுமானால் மாறி இருக்கலாம். நாம் மாறவில்லை. போராட்ட களமும் மாறவில்லை. இதுதான் திமுக.
“நாங்கள் அரசியலுக்கு வந்தபோது, எதிரிகள் பொய்களையும் வதந்திகளையும் பரப்பினர். ஆனால் இன்று, பாஜகவினர் பொய்களையும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவதோடு மட்டுமல்லாமல், அதை எப்படி உண்மையாக மாற்றலாம் என யோசிக்கின்றனர். அதனால், வரலாற்றை மாற்றுகின்றனர்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு:
இதனிடையே, சாம்சுங் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என முதல்வர், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்கள் செப்டம்பர் 9 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

