சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்காக 500 இடங்களில் மின்னூட்டி நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நகர்ப்புறங்கள், நெடுஞ்சாலைகளில் மின்னூட்டி நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், பொது போக்குவரத்தில் ஆட்டோ, கார்கள் போன்ற சேவைகளில் மின்வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க நகரங்களில் பேட்டரி மாற்று நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி போன்ற பெருநகரங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளதாகவும் ஏற்கெனவே தனியார் மின்னூட்டி நிலையங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தனியாக குறைதீர் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு திருத்திய மின்வாகன கொள்கையை தமிழக அரசு வெளியிட்டது.
மேலும், அதே ஆண்டில் 9 இடங்களில் மின்னூட்டி நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அவை பயன்பாட்டுக்கு வர உள்ளன.
சென்னையில் முதற்கட்டமாக 120 மின்சாரப் பேருந்துகள் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.