சென்னை: மின்சார வாகனம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் இத்தகைய வாகனங்களுக்காக மின்னூட்டி நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சென்னையில் ஒன்பது இடங்களில் இதற்கான பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்கும் என தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனீஷ் சேகர் தெரிவித்தார்.
“இரு, நான்கு சக்கர வாகனங்களுக்கு வசதியாக உள்ள இடங்கள் தேர்வு செய்யப்படும். இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும்,” என்றார் அவர்.
இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் முதற்கட்டமாக மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டி நிலையங்கள் பெசன்ட் நகர், அம்பத்தூர், தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, மெரினா கடற்கரை, அண்ணாநகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.