சென்னை: சாலையோரமாக மின்கம்பிவடம் பதிப்பதற்காகத் தோண்டிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், அதில் சென்ற நால்வர் காயமடைந்தனர்.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய நண்பரை அழைத்துச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 29) சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவன் என்ற ஆடவர்.
விமான நிலையத்தில் தரையிறங்கிய தம் நண்பர் உட்பட மூவருடன் காரில் அவர் ஆந்திரா புறப்பட்டார்.
அவரது கார் சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் டிரங்க் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. 400 கிலோவாட் திறன் கொண்ட மின்கம்பிவடங்களைப் பதிப்பதற்காக அப்பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.
கார் பள்ளத்தில் விழுந்ததில் அதிலிருந்த நால்வரும் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் உதவிக்கு விரைந்து, காருக்குள் இருந்த நால்வரையும் மீட்டனர். அவர்கள் யாருக்கும் காயமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போக்குவரத்துக் காவல்துறையினர், பாரந்தூக்கியின் துணையுடன் காரை மீட்கும் பணியில் இறங்கினர்.
இதனால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


