சென்னை: தமிழகத்தில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நில அதிர்வுகள் தொடர்பாக பொதுமக்கள் பயப்பட வேண்டிய சூழல் சென்னையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் 175வது நிறுவன தின விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஆய்வு மைய இயக்குநர் விஜயகுமார், தமிழகக் கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவித்தார்.
“மழை பெய்வது போன்று இப்போதெல்லாம் நில அதிர்வுகளும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அண்மைக்காலமாக நில அதிர்வு தொடர்பான பதிவுகளும் அதிகமாக உள்ளன. சென்னை கருங்கல் மீது உள்ள ஒரு பகுதியாகும். அதனால் சென்னையில் நில அதிர்வுகள் குறித்த அச்சம் தேவையில்லை.
“ஆனால், கடலோரப் பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அங்கு உயர்ந்த கட்டடங்களைக் கட்டாமல் இருப்பது நல்லது,” என்றார் திரு விஜயகுமார்.
தமிழகத்தில் எந்தெந்தப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என்ற விவரங்களை தமிழக அரசிடம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் உள்ள கனிம வளங்கள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது என்றார்.
“தமிழகத்தில் திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உட்பட சில பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இது தொடர்பாக விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். அந்த ஆய்வுகள் முடிவடைந்த பிறகு அதன் விரிவான ஆய்வறிக்கை சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.
“மேலும், தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்தபோது கைப்பேசி பேட்டரிக்குப் பயன்படும் ‘லித்தியம்’ இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறியப்பட்டுள்ளன.
“இது தொடர்பாகவும் விரைவில் அடுத்தகட்ட ஆய்வு நடவடிக்கைகள் தொடங்கும்,” என்று விஜயகுமார் மேலும் தெரிவித்தார்.


