திருச்சி: திருச்சி நெடுஞ்சாலை விரைவில் அதிவேக எட்டு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதன்மூலம் சென்னை - திருச்சி இடையேயான பயண நேரம் நான்கு மணிநேரமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக உள்ளது. தமிழகத்தின் மிக முக்கிய நெடுஞ்சாலைகளில் இதுவும் ஒன்று.
இதனால் சென்னை-திருச்சி இடையே உள்ள 310 கிலோமீட்டர் தூரத்தை ஆறு மணி நேரத்தில் கடந்துவிட முடிகிறது. எனினும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இந்த நெடுஞ்சாலையை அதிவேக நெடுஞ்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) திட்டமிட்டுள்ளது. எட்டு வழிச்சாலையை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
மிக விரைவில் இதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிகிறது. வரும் 2025ஆம் ஆண்டு மத்தியில் இத்திட்டத்துக்கான அடுத்தகட்ட பணிகள் துவங்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.

