சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க கடலுார், காரைக்கால் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சிதம்பரம் நடராஜர் கோவில் சொத்துகளை, பொது தீட்சிதர் சபா நிர்வகிக்கிறது என்றும் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலுார், சேலம், திருநெல்வேலி, புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டங்களில் கோவிலுக்குச் சொந்தமாக 3,000 ஏக்கருக்கு மேலான நிலம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மோசமான நிர்வாகம் காரணமாக, கோவில் சொத்துகள் விரயமாகிவிட்ட நிலையில், கோவில், அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, ராதாகிருஷ்ணன் தமது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் சொத்துகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் 12 வாரங்களில் இந்த நடவடிக்கைகளை முடிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

