சென்னை: தமிழ் நாடு அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பைச் சமூகப் பொறுப்பு நிதி, நன்கொடைகள் மூலம் வெளிப்படையான முறையில் மேம்படுத்தும் நோக்கில் ‘நலம் டிஎன்’ என்ற புதிய இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் இணையத்தளத்தைத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயர் சிறப்பு சிகிச்சைகள் வழங்குதற்காக, உள்கட்டமைப்பு, உயர்தர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்தும் நோக்கில், நிறுவனங்கள், நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று வெளிப்படையான முறையில் செயல்படுத்தும் இந்த இணையத்தளம் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கட்டமைப்பின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் மூலம் நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை எளிமையான முறையில் நேரடியாகவும் பாதுகாப்பாகவும் வழங்க முடியும்.
விழாவில் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், “பொதுமக்கள் தங்களது இல்லத் திருமணங்கள், பிறந்தநாள் போன்ற சுப நிகழ்ச்சிகளைக் கொண்டாடும்விதமாக ‘நலம் டின்’ இணையத்தளத்தில் விரும்பும் அரசு மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கலாம்,” என்றார்
அத்துடன், தமிழகம் முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.139.47 கோடி மதிப்பிலான புதிய மருத்துவக் கட்டடங்கள், நவீன மருத்துவ உபகரணங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்துள்ளார். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-II) என மொத்தம் 2,144 பேருக்குப் பணிநியமன ஆணைகளையும் நிகழ்ச்சியில் அவர் வழங்கினார்.
கீழ்ப்பாக்கம், பரமக்குடி உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வார்டுகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

