மேட்டூர்: மேட்டூர் அருகே உத்தரப் பிரதேச சுற்றுலாப் பயணிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக மூன்று காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேர் சொகுசுப் பேருந்தில் 35 நாள்கள் ஆன்மீகச் சுற்றுலா வந்தனர். தமிழகத்தில் காஞ்சி, ஸ்ரீரங்கம், ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களைப் பார்வையிட்டனர்.
பின்னர், கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு தமிழக எல்லையான மேட்டூர் காரைக்காடு சோதனைச் சாவடி வழியாக டிசம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்றனர். அப்போது காரைக்காடு மதுவிலக்கு சோதனைச் சாவடியில் காவலர்கள் சொகுசுப் பேருந்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
பணி மாற்றும் நேரம் என்பதால் காவலர்கள் அனைவரும் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர். அப்போது, வாகனத்தின் ஆவணங்களைக் காவலர்கள் கேட்டுள்ளனர்.
மேலும், பேருந்தின் ஓட்டுநரிடம் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச சுற்றுலாப் பயணிகள் மற்றும் சோதனைச் சாவடி காவலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் இரும்புக் கம்பி கொண்டு தாக்கினர்.
அதேபோல், காவலர்கள் சுகனேஸ்வரன், செந்தில்குமார், முத்தரசு மற்றும் பொதுமக்களும் சேர்ந்து உத்தர பிரதேச சுற்றுலாப் பயணிகளை ரப்பர் பைப், கட்டைகள் கொண்டு தாக்கினர்.
மேலும், காவலர்கள் பயணிகளைச் சோதனைச் சாவடியில் காலால் எட்டி உதைத்து உள்ளனர். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கொளத்தூர் காவலர்கள் உ.பி சுற்றுலாப் பயணிகள் மற்றும் சோதனைச்சாவடி காவலர்களைக் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
இதனைத்தொடர்ந்து, கொளத்தூர் காவலர்கள் பயணிகளை அழைத்து வந்த பேருந்து ஓட்டுநர் சிவ நாராயணன் (52), அஜய் (20) மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிணையில் விடுவித்தனர். அதேபோல், பணியில் இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து சுகனேஸ்வரன், செந்தில்குமார், முத்தரசு ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவலர்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.