திருநெல்வேலி: தமிழகத்தின் தொன்மை நாகரிகத்தை உலகறியச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகங்களைப் பார்வையிட வருமாறு பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.356 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அப்போது உரையாற்றிய அவர், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்துச் சில முக்கியக் கேள்விகளை எழுப்பினார். “கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகி நீண்ட காலம் கடந்தும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
“அதே வேளையில், பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பெருமிதத்துடன் நான் உங்கள் முன்னால் கம்பீரத்துடன் நின்று கொண்டு இருக்கிறேன். பொருநை தமிழர்களின் பெருமை. இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு. தமிழக அரசு மிகக்குறுகிய காலத்தில் உலகமே வியக்கும் வகையில் ‘பொருநை அருங்காட்சியகத்தை’ கட்டி முடித்துள்ளது.
“இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் மண்ணிலிருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
“தமிழர்களின் வரலாற்று தொன்மையை நிரூபிக்கும் ஆய்வுகள் ஏதும் நடக்கக் கூடாது. மீறி நடந்தாலும் அந்த ஆய்வு முடிவுகள் வெளியில் வந்து விடக்கூடாது. இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட, தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் வெறுப்போடு செயல்படுவதை எதிர்த்துதான், நாம் இன்றைக்கு உறுதியோடு போராடிக்கொண்டு இருக்கிறோம்.
“உரிமையோடு உங்கள் எல்லோரையும் பார்த்து கேட்க விரும்புவது, நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் அருங்காட்சியகங்களைப் பார்க்க வேண்டும் என்பதே,” என்று மக்களுக்கும் பிரதமருக்கும் அழைப்பு விடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

