சென்னை: மும்மொழி கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது என்றும் கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் கொண்டு வருவது அவசியம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பேசிய அவர், மாநில சுயாட்சி உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என அறிவித்தார்.
மாநில சுயாட்சியை உறுதி செய்ய, மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் குறித்து இக்குழு விரிவாக ஆராயும் எனத் தெரிகிறது.
இந்த உயர்மட்டக்குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் செட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“மாநில பட்டியலில் உள்ள கல்வி, மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை மத்திய அரசு மடைமாற்றம் செய்ய முயற்சி செய்து வருவதாகச் சாடிய முதல்வர் ஸ்டாலின், மருத்துவக் கொள்கையை நீட் தேர்வு நீர்த்துபோக செய்துள்ளது என்றார்.
“பொதுக்கல்வி முறையை நீட் தேர்வு எதிர்க்கிறது. இத்தேர்வு காரணமாக பல மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்துள்ளது. இதனால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்
“மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி முறையால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாட்சி கொண்ட நாடாகத்தான் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று திமுக தொடர்ந்து முழங்கி வருகிறது,” என்றார் ஸ்டாலின்.
மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படுவதாகவும் அனைத்து மாநிலங்களின் நலன் கருதி இந்த உயர்மட்டக் குழு அமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இக்குழு மாநில உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த பரிந்துரைகளை வழங்கும் என்றும் குரியன் ஜோசப் குழு வரும் ஜனவரியில் இது தொடர்பாக இடைக்கால அறிக்கையையும் இரண்டு ஆண்டுகளில் இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்யும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஏற்கெனவே தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தற்போது மாநில சுயாட்சிக்காக குழு அமைக்கப்பட்டுள்ளதும் இருதரப்புக்கு இடையிலான புகைச்சலை அதிகப்படுத்தும் என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.