சென்னை: ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகைகளை பட்ஜெட் வாரி வழங்கி உள்ளது.
“அதேநேரம், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீதும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைத்துப்பகுதி மக்கள் மீதும் வரிச்சுமைகளை மத்திய அரசின் பட்ஜெட் ஏற்றியுள்ளது.
“அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகம், கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணித்து அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எதேச்சதிகரமாக செயல்படுகிறது மத்திய பாஜக அரசு.
“எனவே, பட்ஜெட்டையும் மத்திய பாஜக அரசையும் கண்டித்து பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாநகரம், நகரம், பேரூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும்,” என்று பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

