புதுடெல்லி: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், குறிப்பிட்ட சில பீர் வகைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து கொள்முதல் செய்து விற்பனை செய்வதாகவும் மற்ற வகை பீர் குறைந்த அளவிலேயே விற்கப்படுவதாகவும் இந்தியப் போட்டித்தன்மை ஆணையத்தில் (சிசிஐ) புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கின் இந்த நடவடிக்கை வர்த்தகப் போட்டியைக் குறைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதுடன் வாடிக்கையாளர்களின் தேர்வு செய்யும் உரிமையை குறைப்பதாகவும் நியாயமான வர்த்தகப் போட்டியைத் தடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த இந்தியப் போட்டித்தன்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி 60 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போட்டித்தன்மை ஆணைய இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது.
முன்னதாக இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்த டாஸ்மாக் நிர்வாகம், தங்கள் கொள்முதல் நடைமுறை தானியக்க முறையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது என்றும் அது சராசரி விற்பனைக் கணக்கீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறியிருந்தது. அந்த வகையில், முந்திய மாத விற்பனை, இருப்பு நிலவரத்தின் அடிப்படையில் மென்பொருள் மூலம் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கொள்முதல் விவர ஆவணம் தயார் செய்யப்பட்டுவருவதாகக் கூறியுள்ள டாஸ்மாக் நிர்வாகம், நுகர்வோரின் விருப்பம் மற்றும் தேவையைப் பூர்த்திசெய்யும் உற்பத்தியாளரின் திறன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட ஒரு வகை மதுபானத்தின் விற்பனை நடைபெறுகிறது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

