தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீமானின் தேர்தல் பிரசாரத்திற்குத் தடை கோரி காவல்துறையில் மனு

2 mins read
283cf2ca-2041-48d7-afa8-482bea181976
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். - கோப்புப்படம்: ஊடகம்

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசுவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப.ரத்தினசாமி ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் விளம்பரத்துக்காகவும் சுயலாபத்துக்காகவும் மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில், இனம், மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துகளை பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கடந்த 2023 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் போது, பட்டியலினச் சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக அவர் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

பெரியார் மீது வேண்டுமென்றே வீண் அவதூறுகளை பொதுவெளியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பரப்பி உள்ளார். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அவர் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஈரோட்டில் இடைத் தேர்தலுக்கான பரப்புரை வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் பிரிவினைவாதக் கருத்துகளை பேசி, கலவரத்தைத் தூண்டி விட சீமான் முயற்சி செய்கிறார். இது அரசியலமைப்புச் சட்டப்படி மாபெரும் குற்றமாகும். எனவே, சீமான் தேர்தல் பரப்புரை செய்யத் தடை விதிக்க வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார் குறித்த பேச்சால் ஈரோட்டில் சீமானுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. கடந்த இடைத்தேர்தலின் போது அருந்ததியர் சமூகம் குறித்து பேசியதும் சீமானுக்கு சிக்கல் தான்.

குறிப்புச் சொற்கள்