சென்னை: கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டறியச் சென்ற இடத்தில் பல பேருந்துகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆயுத பூஜை, விஜயதசமி தொடர்விடுமுறை காரணமாக பெங்களூருவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 10ஆம் தேதி முதல் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இணைப் போக்குவரத்து ஆணையர் சுரேஷ் தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், தமிழக எல்லையான ஜுஜுவாடி முதல் ஓசூர் பேருந்து நிலையம் வரை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், 18 ஆம்னி பேருந்துகளில் உரிய ஆவணங்கள் இல்லாததும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததும் தெரிய வந்தது.
அதனையொட்டி, பேருந்துகளைப் பறிமுதல் செய்த அலுவலர்கள் ரூ.2.37 லட்சம் அபராதம், ரூ.27 லட்சம் வரி விதித்தனர்.
மேலும், பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக 71 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.17 லட்சம் அபராதம், ரூ.9.71 லட்சம் வரி விதிக்கப்பட்டது.


