சென்னை: பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆதரவாக, இயக்குநர் ஆர்.கே. செல்வமணி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மியூசிக் மாஸ்டர்’ என்ற இசை வெளியீட்டு நிறுவனம் 2010ஆம் ஆண்டு வழக்கு ஒன்று தொடர்ந்தது.
அதில், “இளையராஜா இசையமைத்த பாண்டியன், குணா, தேவர் மகன், பிரம்மா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் இசை வெளியீட்டு உரிமையை, இளையராஜாவின் மனைவி ஜீவா நடத்தி வந்த இசை நிறுவனத்திடமிருந்து தங்களது நிறுவனம் பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்தது.
மேலும், “எங்களின் அனுமதியின்றி அந்தப் படத்தின் பாடல்களை யூடியூப் உள்ளிட்ட சமூகத்தளங்களில் யாரும் பயன்படுத்தக் கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டும்,” எனத் தங்களின் மனுவில் அது கோரியிருந்தது.
இவ்வழக்கில் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே முன்னிலையாகி சாட்சியம் அளித்த நிலையில், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.செல்வமணி ஜனவரி 8ஆம் தேதி முன்னிலையாகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர், “இளையராஜா தான் இசையமைத்துள்ள பாடல்களின் காப்புரிமையை என்றும் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியது இல்லை. அந்தப் பாடல்களின் காப்புரிமை இளையராஜாவிடம்தான் உள்ளது.
சம்பந்தப்பட்ட படத்தில் அந்தப் பாடல்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று சாட்சியம் அளித்தார்.

