சென்னை: சென்னையில் உள்ள கூவம், அடையாறு ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய்ப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள நீர்நிலைகளைப் பழமை மாறாமல் பாதுகாக்கக்கோரி வி.கனகசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, நீர்நிலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றவும் அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கூவம் ஆற்றை முழுமையாகச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
“நீர்நிலைகளில் ஒருபோதும் ஆக்கிரமிப்புகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. சென்னையில் உள்ள கூவம், அடையாறு ஆறுகளும் பக்கிங்ஹாம் கால்வாயும் முழுமையாக ஆக்கிரமிப்பில் உள்ளன.
“கூவம் நதி சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் புனரமைப்பு போன்ற திட்டங்களின் மூலமாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் புற்றீசல் போல ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன.
“குறிப்பாக, அடையாறு கடலில் கலக்கும் கழிமுகம் உள்ள பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கரையோரங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன,” என்று நீதிமன்றம் கூறியது.