மதுரை: பாரதிய ஜனதா கட்சியின் தொழிற் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் அண்மையில், சமூக வலைத்தளத்தில், “பழநி முருகன் கோயிலுக்குத் திருப்பதி லட்டு விவகாரத்தில் பேசப்படும் திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து செல்வகுமார் மீது பழனி கோயில் நிர்வாகம் பழனி காவல்துறையிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் செல்வகுமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் பிணை வழங்கக் கோரி செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நெய் வழங்கிய திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனம் ஏற்கெனவே அவர்களால் தடை செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலின் டிரஸ்டி உறுப்பினராக இருக்கிறார். அது தொடர்பான சுற்றறிக்கையில் இருந்த தகவலையே நான் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தேன். தவறான நோக்கில் தவறான செய்தியைப் பரப்பவில்லை.
இந்த வழக்கில் நான் தவறுதலாகச் சிக்கவைக்கப்பட்டுள்ளேன். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும், வழக்கு விசாரணைக்கும் ஒத்துழைக்கிறேன். சாட்சிகளைக் கலைக்க மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் எனச் செல்வகுமார் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “மனுதாரர் தவறான தகவலை டுவீட் செய்ததால் மதரீதியான பிரச்சினைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டது. ஆகவே, மனுதாரருக்கு முன்பிணை வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, அந்தத் தகவலைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றுவதற்கு முன்பாக அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த மனுதாரர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் பகிர்ந்த தகவல் தவறானது என்றும், பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே நெய் வாங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் மூன்று வாரங்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும். அத்துடன் தனது கைப்பேசியை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், அவருடைய வலைத்தளப் பதிவை உடனடியாக நீக்கவேண்டும். மேலும் அந்தத் தகவல் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பதிவிடப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன்பிணை வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.