சிவகங்கை: சிவகங்கையில் மாடு, குதிரை வண்டிப் பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது. மெய்ஞானபுரத்தின் தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில் பெரியமாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவு மாடுகள் பங்கேற்றன.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 42 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் 10 ஜோடிகள், சின்ன மாடு பிரிவில் 16 ஜோடிகள், பூஞ்சிட்டுப் பிரிவில் 16 ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாடுகளுக்கு 8 மைல்கள், சின்ன மாடுகளுக்கு 6 மைல்கள், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 மைல்கள் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டன.
அதேபோல் குதிரை வண்டிப் போட்டியில் 10 குதிரைகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியை சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, வாணியங்குடி, அழகுமெய்ஞானபுரம், ரோஸ்நகர், பையூர் உள்ளிட்ட பகுதி மக்கள் கண்டு களித்தனர். மேலும் வெற்றி பெற்ற மாடுகள், குதிரைகளின் உரிமையாளர்களுக்கும், வண்டி ஓட்டுநர்களுக்கும் பரிசுகள் அளிக்கப்பட்டன.

