சென்னை: விளையாட்டுப் போட்டிகளின்போது மரணம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது தொடர்பாக திட்டம் வகுக்க தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
திருவள்ளூர் ஒத்திக்காடு ஏரியில் 2020ல் கிரிக்கெட் போட்டி நடந்தபோது பந்து தாக்கி லோகநாதன் என்பவர் உயிரிழந்தார்.
இளைஞர் லோகநாதனின் தந்தை தாமோதரன் அளித்த புகாரை அடுத்து, ராசு, ஐயப்பன் ஆகியோர் மீது காவலர்கள் வழக்குப் பதிந்தனர்.
இதையடுத்து தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ராசு, ஐயப்பன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, போட்டியை ஏற்பாடு செய்தவர்களுக்கு மரணம் ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் இல்லை எனக் கூறி ராசு, ஐயப்பன் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

