திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அரசு சார்பில் புதிய மற்றும் முடிவுற்ற 57 திட்டப் பணிகளை ரூ.301.80 கோடி மதிப்பீட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (டிசம்பர் 19) தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.250.48 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகளையும், ரூ.51.32 கோடி மதிப்பீட்டில் 38 முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 300 பயனாளிகளுக்கு ரூ.9.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

