விழுப்புரம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநாட்டுப் பணிகளைக் கவனிக்க 27 குழுக்களை அமைத்துள்ளார் கட்சித்தலைவர் விஜய்.
ஒருங்கிணைப்புக் குழு, பொருளியல் குழு, சட்டநிபுணர்கள் குழு, வரவேற்புக்குழு,மகளிர் பாதுகாப்புக் குழு, இருக்கை மேலாண்மைக் குழு என 27 குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு தனித்தனியாக தலைவர், ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்றும், மாநாடு நடைபெறும் பகுதியில் குப்பை கூளங்களை சேர்க்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
27 செயல்வடிவ குழுக்களில் இடம்பெற்றுள்ளோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுமாறு விஜய் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மாநாட்டுக்கு பந்தக்கால் நடுவது முதல் நிர்வாகிகளுக்கு கட்சி வேட்டிகளை அனுப்புவது வரை அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடப்பதாக தமிழக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மாநாட்டுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என விஜய் அறிவுறுத்தி இருப்பதாகவும், சிறார்களை அழைத்து வரக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

