இஸ்லாமிய சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘பீஸ்ட்’ படத்தை தடை செய்ய வேண்டும் என தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், தமிழகத்தில் நிலவும் அமைதியைக் குலைப்பதற்காக சிலர் முயற்சி செய்கின்றனர் என திரு ஜவாஹிருல்லா சாடி உள்ளார்.
“இதற்கு முன்பு ‘விஸ்வரூபம்’, ‘துப்பாக்கி’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் இஸ்லாமிய சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டு பெரும் குழப்பங்களுக்கு வித்திட்டன.
மொத்த இஸ்லாமிய சமுதாயமே பயங்கரவாத சமுதாயமாக மேற்கண்ட படங்களில் காட்டப்பட்டன. இடைக்காலத்தில் சிறிது நின்றிருந்த இந்த இழி செயலுக்கு ‘பீஸ்ட்’ என்ற படத்தின் மூலம் புத்துயிர் ஊட்டப்பட்டு உள்ளது,” என்று திரு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ‘பீஸ்ட்’ படத்தில் இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்திரிக்கும் காட்சி இருந்ததாகக் கூறப்படுவது தமக்கு அதிர்ச்சியளித்தது என்று குறிப்பிட்டுள்ளார்.