சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், தன்னைப் பின்பற்றி வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் மதுரை புறப்பட்டார்.
அதற்கு முன்பு தவெக தலைவர் விஜய்யை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் அதிகாலை முதலே தவெக தொண்டர்கள் குவிந்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் கட்சித் தொடங்கிய பின் விஜய் முதல் முறையாக வியாழக்கிழமை சென்னை விமான நிலையத்தில் பேசினார்.
“மதுரை விமான நிலையத்தில் நமது நண்பர்கள், தோழர்கள், தோழிகள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மதுரை மக்களின் அன்புக்கு கோடான கோடி நன்றிகள். நான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறேன். கூடிய விரைவில் மதுரைக்கு வரும்போது நமது கட்சி சார்பாக வேறொரு சந்தர்ப்பத்தில் உங்களை நான் சந்திப்பேன். இன்று நான் என் வேலையை பார்க்கப் போகிறேன். நீங்களும் பத்திரமாக உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். யாரும் எனது வாகனத்திற்குப் பின்னால் பின்தொடர்ந்து வர வேண்டாம்,” என்று விஜய் தெரிவித்தார்.
“இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான முறையில் செல்லாதீர்கள். அந்த காட்சிகளை பார்க்கும்போது பதற்றமாக இருக்கிறது. மற்றொரு சந்தர்ப்பத்தில் உங்களை நான் சந்தித்து பேசுவேன்.
“உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள். மதுரை விமான நிலையத்தில் இந்தத் தகவலை என்னால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதனால் இங்கேயே உங்களிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறேன்,” என்று மதுரை புறப்படுவதற்கு முன்பு விஜய் மேலும் தெரிவித்தார்.

