‘வாக்கு கேட்டு வரவேண்டாம்’: சுவரொட்டியால் பரபரப்பு

‘வாக்கு கேட்டு வரவேண்டாம்’: சுவரொட்டியால் பரபரப்பு

1 mins read
38757eea-f74e-4c57-a7e1-a6634b4f770a
ஜெயங்கொண்டத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டி. - படம்: தினத்தந்தி

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்கள் திரும்பப்பெற ஏப்ரல் 9ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதையடுத்து, அரசியல் கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் அத்தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் வாக்கு கேட்டு வேட்பாளர்கள் யாரும் உள்ளே வர வேண்டாம் என ஜெயங்கொண்டம் மாவட்டத்திற்கு உட்பட்ட பிச்சனூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் என்ற பெயரில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டியில்,” பிச்சனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை, சுகாதாரமான குடிநீர், மின்விளக்கு, கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என கடந்த ஐந்தாண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம்,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்