சென்னை: ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து மாநிலம் முழுவதும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கக்கூடாது எனத் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டம், ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் விளக்கம் அளித்த அவர், மாநிலத்தின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் பாதுகாப்பான வாழ்வியலில்தான் அடங்கியுள்ளது என்றார்.
திங்கட்கிழமை (செப்டம்பர் 7) காவல்துறை, தீயணைப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய திரு விஜய், எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கமளித்தார்.
சட்டம், ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டால் மட்டுமே தொழில் முதலீடுகளும் புதிய வேலைவாய்ப்புகளும் பெருகும் என்றார் அவர்.
காவல்துறையின் சட்டபூர்வ நடவடிக்கைகளில் முதல்வர், அமைச்சர்கள் அல்லது அரசியல் அதிகாரிகளின் தேவையற்ற தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு மிகவும் உறுதியாக உள்ளது என்றும் குற்றவாளிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் திரு விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், தனிப்பட்ட குற்றச் சம்பவங்களுக்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம், ஒழுங்கு நிலைக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பெண்கள் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசுபவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்த முதல்வர் விஜய், பெண்களைப் பற்றி இரட்டை அர்த்தத்திலோ, ஆபாசமாகவோ பேசினால் தமது அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்றார்.
இனிமேல் அவ்வாறு பேசுபவர்கள் மீது சட்டம் பாயும் என்றும் எச்சரித்தார்.
“திருவள்ளுவரின் நடுநிலை வழியிலும் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்களின் சிந்தனைகளை ஒருங்கிணைத்தும் தவெக அரசு நடுநிலையோடு மக்கள் நல ஆட்சியை வழங்கி வருகிறது,” என்றார் திரு விஜய்.


