சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக்கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 முதல் ஊதியம் உயர்த்தப்படும் என்று மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
அத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றத்தில் அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இந்த ஊதிய உயர்வின்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.486.90 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு மட்டுமின்றி, ஊழியர்களின் நலன் கருதி பல முக்கியமான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும். ஆண்டுதோறும் மூன்று சீருடைகளுக்கான துணி, தையல் செலவுக்காக ரூ.6,000 வழங்கப்படும்.
மேலும், சுழற்சி முறையில் எட்டு மணி நேரப் பணி ஒதுக்கீடு, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, மாதத்தில் இரு நாள்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு ஆகியவை நடைமுறைப்படுத்தப்படும்.


