சென்னை: ‘காவல் உதவி’ செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ள அவர், மாணவிகள் ‘காவல் உதவி’ செயலியை தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்திருப்பதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
“ஆபத்து ஏற்படும் தருணங்களில் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளும் வகையில், ‘சிவப்பு நிற அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம், காணொளி ஆகியன கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை உதவி வழங்கப்படும்.
“மாணவிகள் காவல் உதவி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் (Google Play Store, App Store) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்,” என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

