திருச்சி: திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் அரைக்கால் சட்டை (ஷாா்ட்ஸ்) அணியக்கூடாது என்ற ஆடைக் கட்டுப்பாட்டைக் கண்டித்து வியாழக்கிழமை (ஏப்ரல் 16) நடைபெற்ற மாணவர்கள்வர்கள் போராட்டம் இரவுவரை நீடித்தது.
ஆடைக் கட்டுப்பாடு குறித்து பேசிய துணை வேந்தர் மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், தங்களது கண்ணோட்டத்தை மாற்ற வேண்டுமே தவிர ஆடையில் பிரச்சினை இல்லை என்றும் கூறி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரைக்கால் சட்டை அணிவதால் மாணவர்கள், பேராசிரியர்களின் கவனம் சிதறி பாலியல் தொடா்பான குற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக துணை வேந்தர் கூறியதாகக் கூறப்படுகிறது.
தங்களின் போராட்டங்களுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பு வகிக்கும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இது குறித்து ஒரு மனு அளிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பிற தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மாணவர் அமைப்பினர் கேட்டுக்கொண்டனர்.
திருச்சி மாவட்டம், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நவலூா் கொட்டப்பட்டில் அமைந்துள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிக்கின்றனர்.

