சென்னை: போதைப்பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர் முழுவதும் கடந்த சில நாள்களாகப் போதைப்பொருள் புழக்கம் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் வீடுகளில் காவல்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி உள்ள இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்தச் சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்யும் நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சென்னை ஜெ.ஜெ. நகரில் போதைப்பொருள்கள் வைத்திருந்த தனியார் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவி உட்பட 12 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, போதைப்பொருள்கள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.