போதைப் பொருள்: மூன்று நாள்களில் 334 பேர் கைது

போதைப் பொருள்: மூன்று நாள்களில் 334 பேர் கைது

1 mins read
82c084f7-fa25-4895-bf0c-7670d4831535
சென்னை காவல்துறை ஆணையர் அருண். - படம்: ஊடகம்

சென்னை: போதைப் பொருள் விற்பனை, கடத்தல் தொடர்பாக, சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மூன்று நாள்களில் மட்டும் 334 பேர் கைதாகி உள்ளனர்.

இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அருண் வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கடத்துவோர், விற்பனை செய்வோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதையடுத்து, காவல்துறையும் தன் பங்குக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்படுவதுடன், அவர்களது சொத்துகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டதன் பேரில், கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை சென்னை காவல்துறை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் சிறப்பு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருள் கடத்தல், விற்பனை தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மூன்று நாள்களில் மட்டும் 195 வழக்குகள் பதிவானதாகவும் 334 குற்றவாளிகள் கைதானதாகவும் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 58 பேர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்