சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) கொடி, பெயா், ஜெயலலிதாவின் பெயா், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச் செயலாளா் டிடிவி தினகரனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நீதிமன்றத்தில் அதிமுக மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், அந்த மனுவை அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றுக்கொண்டாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலராக இருந்த வி.கே.சசிகலா, துணைப் பொதுச் செயலராகப் பதவி வகித்த டிடிவி தினகரன் ஆகியோா் 2017ஆம் ஆண்டு நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் எடுத்த தீர்மானம் அடிப்படையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
அதனை எதிா்த்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
இதற்கிடையே, அதே ஆண்டு டிடிவி தினகரன் அமமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினாா். அப்போது அதிமுக கொடி வடிவில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி தமது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தாா்.
இதையடுத்து, அதிமுக கொடி வடிவில் இருக்கும் அக்கொடியை அமமுக பயன்படுத்தத் தடைவிதிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் வழக்குத் தொடத்தனர்.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அந்த வழக்கு (ஏப்ரல் 16) புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி, அந்த வழக்கைத் திரும்பப் பெற்றுகொள்வதாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நீதிபதி டிடிவி தினகரனுக்கு எதிரான அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார்.