நாமக்கல்: தமிழகத்தில் இருந்து விமானம் மூலம் முட்டைகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராஜன், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் முட்டை ஏற்றுமதியும் குறைந்துள்ளது என்றார்.
“எனவேதான் விமானம் மூலம் முட்டை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே வேளையில் கப்பல்கள் மூலம் ஓரிரு கொள்கலன்களில் முட்டைகள் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. போர்ப் பதற்றம் தணிந்தால் முட்டை ஏற்றுமதி சீராகும்,” என்றார் திரு சுந்தர்ராஜன்.
நாமக்கல் வட்டாரங்களில் 1,200க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. நாள்தோறும் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
துபாய், குவைத், கத்தார், ஓமான், பஹ்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குக் கப்பல்களில் நாள்தோறும் 80 லட்சம் முட்டைகள் கொள்கலன்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
இதனிடையே, கோழிப் பண்ணைகளில் 21 நாள்களுக்கு ஒரு முறை கோழிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுவதாகவும் பறவைக் காய்ச்சல் பாதிப்பின்மை காரணமாக ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் இன்றி நடைபெறுவதாகவும் திரு சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
“அண்மையில் ராசிபுரத்தில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் கோடை வெப்பம் காரணமாகக் கோழிகள் அதிகளவில் இறந்தன. மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் அவற்றை முறையாக அப்புறப்படுத்த பண்ணை உரிமையாளருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

