சென்னை: இந்தியாவின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.
ஜூன் 1ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தலில் முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இடம்பெறுகிறது.
தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் வெள்ளிக்கிழமையன்றே தேர்தல் நடக்கிறது. தமிழகத்திலுள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தலும் அன்றே நடைபெறுகிறது.
இந்நிலையில், 17ஆம் தேதி புதன்கிழமை தேர்தல் பரப்புரைக்கான இறுதி நாள் என்பதால், கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளன. புதன்கிழமை மாலை 6 மணியுடன் கட்சிகளும் வேட்பாளர்களும் பரப்புரையை முடித்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகும் பரப்புரையைத் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எச்சரித்துள்ளார்.
இதன் தொடர்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
“திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, இணையம், குறுஞ்செய்தி, சமூக ஊடகம், இசை நிகழ்ச்சி என எந்த வகையிலும் பரப்புரை செய்யக்கூடாது.
“மீறி பரப்புரையைத் தொடர்ந்தால் ஈராண்டுச் சிறை அல்லது அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்,” என்று எச்சரித்துள்ளார்.
தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோரும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோரும் புதன்கிழமை மாலை 6 மணிக்குமேல் அத்தொகுதியைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், தங்குவிடுதிகள் போன்ற இடங்களில் வெளியாள்கள் யாரும் தங்கியுள்ளார்களா என்பது தொடர்பில் சோதனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
10,000 சிறப்புப் பேருந்துகள்
இதனிடையே, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 17, 18ஆம் தேதிதிகளில் சென்னையிலிருந்து 7,154, பிற ஊர்களிலிருந்து 2,060 என மொத்தம் 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையிலிருந்து புறப்படும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பெரும்பான்மையான தடங்களில் இருக்கைகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதுபோல், சென்னை - கன்னியாகுமரி, சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன.