தமிழக வெற்றிக் கழகத்தைக் கட்சியாக அங்கீகரித்த இந்தியத் தேர்தல் ஆணையம்

2 mins read
காத்திருந்தோம், கிடைத்துவிட்டது: விஜய் நெகிழ்ச்சி
254657f4-4e03-456e-9630-3248658cb58c
தமிழகம் முழுவதிலும் உள்ள தவெக கட்சி தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் கட்சிக்குக் கிடைத்த அங்கீகாரத்தை உற்சாகமாகக் கொண்டாடினர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தைப் (தவெக) பதிவு செய்த அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 8) அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டபூர்வமாக பரிசீலித்த இந்தியத் தேர்தல் ஆணையம், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், இந்தியத்தேர்தலில் கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.

“இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அவர்.

“திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இந்தச் சூழலில் நமது கட்சியின் முதல் மாநாட்டிற்கான பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்,” என அவர் கூறினார்.

தவெக கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, தமிழகம் முழுவதிலும் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

தவெக மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

இதனிடையே விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு 21 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு தவெக கட்சிப் பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நடிகர் விஜய், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த அனுமதி வேண்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.

மாநாடு நடைபெறவுள்ள இடத்தைக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இந்நிலையில் விழுப்புரம் காவல்துறையின் உயரதிகாரி சுரேஷ், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு அனுப்பிய கடிதத்தில் 21 கேள்விகள் கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு, கடிதம் கிடைத்த 5நாள்களுக்குள் தவெக பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி செப்டம்பர் 6ஆம் தேதி காவல்துறையால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை எழுத்துப்பூர்வமாக தவெக கட்சியினர் காவல்துறை உயரதிகாரியிடம் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை 21 நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி அளித்தது.

குறிப்புச் சொற்கள்