சென்னை: தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அநேகமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார் இளங்கோவன்.
அவரது இறப்புச் சான்றிதழ் சட்டப்பேரவைச் செயலருக்கு அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் உறுப்பினராக இருந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, ஆறு மாதங்களுக்குள் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலகம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாள்களில் ஈரோடு கிழக்குத் தொகுதி காலியாக இருப்பதை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும். அந்த ஆறு மாதங்களுக்குள் இத்தொகுதியில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தொகுதில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் இளங்கோவன் மகன், திருமகன் ஈ.வே.ரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.
இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இத்தொகுதியில் களமிறக்கப்பட்டு, வெற்றி பெற்றார்.
வரும் பிப்ரவரி மாதம் டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

