துாத்துக்குடி: கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருச்செந்தூர் கோயில் கடற்கரையை தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரைப் பகுதியில், சில மாதங்களாக மண் அரிப்பு ஏற்பட்டு பக்தர்கள் புனிதநீராட இயலாத நிலை உள்ளது.
கோவில் முன்பு 500 அடி நீளத்திற்கு, 7 அடி ஆழத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, கரையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மண் அரிப்பு பிரச்சினையைத் தடுக்க 18 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள சென்னை ஐஐடி அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
கடலில் 160 மீட்டர் நீளத்திற்கு அலை தடுப்புச்சுவர் அமைக்கவும் 700 மீட்டர் நீளத்திற்கு மணலால் செயற்கைக் கடற்கரையை உருவாக்கவும் ஐஐடி பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள திருச்செந்தூர் கோயில் கடற்கரையை கனிமொழி எம்பி, அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
“ஐஐடி நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்ததும் கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் பணிக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்,” என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
கடல் அரிப்பைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.