சென்னை: சென்னையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்குக் கீழ்வரும் அரும்பாக்கம் 100 அடி சாலையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் போலியான 100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) இருந்தது தெரியவந்தது.
மேலும் ஒரத்தநாடு திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் படத்துடன் கூடிய அறிமுக அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ஐந்து பெட்டிகளில் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரங்களை தனியார் பேருந்து மூலம் ஒரத்தநாடுக்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டு இருந்ததும், வாக்குச் சேகரிப்பின்போது வைத்திலிங்கம் புகைப்படம் ஒட்டிய இந்தப் போலி இயந்திரத்தைக் காண்பித்து வாக்குச் சேகரிக்க திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரம் ஒரத்தநாடு தொகுதிக்கு உட்பட்டது என்பதால் அந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

