போலி ஆதார் அட்டை: மோசடியில் ஈடுபட்ட 31 பங்ளாதேஷியர் கைது

போலி ஆதார் அட்டை: மோசடியில் ஈடுபட்ட 31 பங்ளாதேஷியர் கைது

1 mins read
b200662d-5497-4e54-b6ad-97031245c480
திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பனியன் நிறுவனங்களில் பணியாற்றிய வெளிமாநில இளையர்களிடம் சோதனை நடத்திய காவல்துறை அதிகாரிகள். - படம்: புதிய தலைமுறை
Google News Preferred Icon

பல்லடம்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏராளமான பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த இளையர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பதாக கோவை தீவிரவாத தடுப்பு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து, காவல்துறை உயரதிகாரிகள் தலைமையிலான குழுவினர், பல்லடம் அருகே அருள்புரம், செந்தூரன் காலனி பகுதியில் இயங்கி வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போலியான ஆதார் அட்டைகளைக் கொடுத்து பணியாற்றி வந்த 28 பங்ளாதேஷிய இளையர்களைக் கைது செய்தனர். மேலும் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு பங்ளாதேஷிய இளையர்களும் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பங்ளாதேஷ் இளையரும் என மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்த இளையர்களிடமிருந்து போலி ஆதார் அட்டையையும் அதன் தொடர்புடைய ஆவணங்களையும் காவல்துறை பறிமுதல் செய்தது. இதுவரை 30 பேர் சிக்கி உள்ளதாகவும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து இன்னும் வேறு யாராவது தமிழகத்தில் தங்கி இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவுக்குள் வெளிநாட்டவர்கள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஊடுருவல் தமிழகம் வரை நீண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஆதார்காவல்துறைபறிமுதல்பங்ளாதேஷ்