லட்சக்கணக்கில் மின்கட்டணம்; விவசாயி அதிர்ச்சி

லட்சக்கணக்கில் மின்கட்டணம்; விவசாயி அதிர்ச்சி

1 mins read
cbc6ff05-f264-4e26-8b23-6a1a6ac4bcb2
மாதிரிப்படம்: - ஊடகம்

ஓசூர்: இருமாத மின்கட்டணமாக இதுவரை அதிகபட்சமாக ரூ.100 செலுத்திவந்த விவசாயிக்கு ரூ.875,000 (S$14,000) மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ந்துபோனார்.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சின்னட்டி எனும் சிற்றூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். அவருடைய குடும்பத்தினர் பலரும் விவசாய வேலை செய்துவருவதால் பெரும்பாலும் வெளியில் சென்றுவிடுவர்.

அதனால் அவரது வீட்டில் மின்பயன்பாடு அதிகமிருக்காது. தமிழக அரசு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருவதால் வீட்டின் மின்கட்டணம் நூறு ரூபாயைத் தொடுவதே அரிது.

இந்நிலையில், கடந்த வாரம் திரு வெங்கடேஷின் கைப்பேசிக்கு மின்வாரியத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், அவரது வீட்டிற்கான மின்சாரக் கட்டணமாக 875,000 ரூபாய் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியுற்ற திரு.வெங்கடேஷ், அதன் தொடர்பில் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுபற்றி விளக்கமளித்த ஓசூர் கோட்ட மின்வாரியப் பொறியாளர் குமார், மின்பயன்பாட்டு அளவைக் கணினியில் பதிவுசெய்தபோது தவறு நிகழ்ந்துவிட்டது என்றார்.

மேலும், தவற்றைச் சரிசெய்யும்படி சம்பந்தப்பட்ட மின்சார அலுவலகத்திற்கு உரிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்