சென்னை: பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இந்தச் செய்திக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
85 வயது கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) காலை முதல் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த விஜய் யேசுதாஸ், தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். அது ஒரு வதந்தி என்று அவர் குறிப்பிட்டார்.
யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், தற்போது அவரது மகன் அளித்த விளக்கத்தால் நிம்மதி அடைந்துள்ளனர்.

