சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை அறிவித்து இருந்தது.
அதன்படி, கடந்த ஆகஸ்டு 20ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
அதன் தொடர்பில், கடந்த நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த நான்கு நாள்கள் முகாமிலும், பெயர் சேர்க்க 838,016 விண்ணப்பங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க நான்கு விண்ணப்பங்கள், ஆதார் இணைப்புக்கு 783 விண்ணப்பங்கள், பெயர் நீக்கம் செய்ய 119,701 விண்ணப்பங்கள், திருத்தம் மேற்கொள்ள 442,111 விண்ணப்பங்கள் என மொத்தம் 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுதவிர, தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகளிடம் நேரிலும், இணையம் மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மேலும், கடந்த அக்டோபர் 29 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலமாகவும் நேரிலும் 1,770,901 விண்ணப்பங்கள், இணையம் வாயிலாக 538,490 விண்ணப்பங்கள் என மொத்தம் 2,309,391 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த விண்ணப்பங்களின் பரிசீலனை நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் தொடங்கின. இந்நிலையில் திங்கட்கிழமை (ஜனவரி 6) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6 கோடி 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். 3 கோடியே 11 லட்சம் ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 24 லட்சம் பெண் வாக்காளர்களும், 9,120 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருக்கின்றனர்.
அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.91 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூரில் 1.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபைத் தொகுதிகளில் ஏறக்குறைய 40 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புதிய வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ஆம் தேதி முதல் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.


