தஞ்சாவூர்: தஞ்சை அருகே மண்ணரிப்பால் சிதைந்துபோன சங்க கால ஈமத்தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
அங்குள்ள பாளையப்பட்டி பகுதியில், கல்வெட்டு ஆய்வாளரும் தமிழ் பேராசிரியருமான கண்ணதாசன் உள்ளிட்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவினர், தமிழக அரசின் தொல்லியல் துறை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டால், சோழ மண்டலத்துச் சங்க காலத் தொன்மை வரலாற்றையும் அக்கால மக்களின் வாழ்வியல், பண்பாட்டையும் வெளிக்கொண்டு வர முடியும் எனக் குறிப்பிட்டனர்.
பாளையப்பட்டி பகுதியில் காணப்படும் அகன்ற வாய்களைக் கொண்ட தாழிகளின் கழுத்துப் பகுதியில் சங்கிலி கோத்தது போன்ற அழகிய வேலைப்பாடு காணப்படுவதாகவும் 25க்கும் மேற்பட்ட தாழிகள் மண்ணரிப்பால் சிதைந்து கிடப்பதாகவும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும், இரும்பாலான பொருள்களின் எச்சங்களும் சிதைந்த நிலையில் காணப்படுவதாகக் கூறினர்.
“படை வீரர்கள் தங்கும் பகுதி, பாளையம் என அழைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வூருக்கு பாளையப்பட்டி எனப் பெயர் வந்தாக வரலாறு உண்டு. ஈமத்தாழியை ஒட்டி ஓடும் வாரி தாழிவாரி என அழைக்கப்பட்ட நிலையில், திரிந்து தாழவாரி என மாறியுள்ளது.
“இப்பகுதி 54 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக அமைந்துள்ளது. இது சோழ மண்டலத்தில் கண்டறியப்பட்ட பெரிய ஈமக்காடுகள் கொண்ட பகுதியாகும். மேலும், இங்கு மனிதர்கள் வசித்ததற்கான பல்வேறு சான்றுகள் உள்ளன,” என்றார் பேராசிரியருமான கண்ணதாசன்.