சென்னை: மெட்ரோ ரயில்களில் பயணிகள் சிலர் கைப்பேசியில் சத்தமாகப் பேசுவது, பாட்டுக் கேட்பது, காணொளி பார்ப்பது, சக பயணிகளுக்கு இடையூறு அளிப்பதாக உள்ளது.
மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அவ்வப்போது விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மெட்ரோ பயணிகளுக்கான முக்கியமான அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறை விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது அந்த அறிவிப்பு.
“சென்னை மெட்ரோ ரயில் மற்றும் வளாகத்திற்குள் சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ கூடாது.
“கைப்பேசியில் உரத்த குரலில் பேசுவது செவியில் பொருத்திக் கொள்ளும் ஒலிச்சாதனம் இன்றி இசை அல்லது காணொளிகளைப் பார்ப்பது; கைப்பேசியில் மெட்ரோ ரயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி (ஸ்பீக்கர்) வசதியைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
“இந்த விதிகளை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம்,” என்று மெட்ரோ நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு பரங்கிமலை வழியாக விமான நிலையம் வரையிலும், விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி சென்னையின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் வகையில் இரண்டாம் கட்டப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

