சென்னை: தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில், நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.449 கோடி நிதி வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.
இந்த நிதியைக் கொண்டு ஏரிகள், கால்வாய்கள் சீரமைக்கப்படும் இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்தப் பகுதிகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, உலக வங்கி நிதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெறும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ரூ. 1.09 கோடி ஒதுக்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“உலக வங்கி நிதியுடன் மதுரை மண்டலத்தில் சித்தார், பச்சையாறு, கீழ் தாமிரபரணி, நம்பியாறு, கல்லூர், கடனாநதி ஆகிய இடங்களிலும் சென்னை மண்டலத்தில் ஆரணியாறு, கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் ஆறு ஆகிய இடங்களிலும் ரூ. 449.59 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உலக வங்கி நிதி ஒதுக்கும்போது, ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்புப் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பதால் அதற்காக ரூ.1.09 கோடி ஒதுக் கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு மேலும் கூறியுள்ளது.