தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிளாஸ்டிக் பையில் உணவு; 11,000 கடைகளுக்கு ரூ.15 கோடி அபராதம்

2 mins read
d72b07e1-b2a1-4726-96ac-f9792beab072
பிளாஸ்டிக் கவரில் உணவு பொட்டலம் தயார் செய்கின்றனர். - படம்: ஊடகம்

சென்னை: சூடான உணவுப் பொருள்களை நெகிழிப்பைகளில் (பிளாஸ்டிக்) பொட்டலமிட்டு விற்பனை செய்த, 11,025 கடைகளுக்கு 14.62 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், சாலையோர உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பதிவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் டிசம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமையன்று நடந்தது. இதில், அமைச்சர் சுப்பிரமணியன் , “பழைய உணவுப் பழக்கவழக்கங்கள் மாறி, விரைவுணவுகளை விரும்பி உண்ணும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.

“இப்படிப்பட்ட சூழலில், சரியில்லாத உணவுகளால், ஒவ்வாமை, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய், வயிற்றுப்புண் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

“இதனால், உணவகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் வணிகர்களுக்கும் தொடர்ந்து சுகாதார பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

“கடந்த மூன்று ஆண்டுகளில், 6,323 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, 2.66 லட்சம் வணிகர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, உணவுப் பாதுகாப்பு மேற்பார்வையாளர்களால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு உள்ளன.

“மாநிலம் முழுதும், உணவுப் பாதுகாப்புத் துறையால், 708,763 உணவுக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உபரி உணவை வீணாக்காமல் பயன்படுத்தும் திட்டத்தில், 1.97 லட்சம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

“சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் பொட்டலமிட்டு விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, 11,025 கடைகளுக்கு, 14.62 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களில், குறிப்புச்சீட்டு ஒட்டாத நிறுவனங்களிடம், 26.93 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

“மேலும், 27.48 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.60 லட்சம் கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 26,446 கடைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்