4 ஆண்டுகளுக்கு முன் வெளியேறிய ‘ஃபோர்டு’ நிறுவனம் மீண்டும் சென்னை வருகிறது: ஸ்டாலின்

2 mins read
6843e520-d1de-4338-bbbf-77d7ff4877ae
முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘ஃபோர்டு’, மீண்டும் முழு ஆற்றலுடன் சென்னைக்கு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சென்னை, குஜராத்தில் உற்பத்தி ஆலைகளை நடத்தி வந்தது ‘ஃபோர்டு’ நிறுவனம். ஆனால், எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. மேலும், தொடர் நஷ்டங்களும் ஏற்பட்டதால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது.

இந்நிலையில், தமிழகத்துக்கான தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடனும் சந்திப்பு நடந்தது. அப்போது சென்னையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குமாறு திரு ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து, ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க உள்ளது. ரூ.3,250 கோடி முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இயந்திர உற்பத்தி அலகை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது அந்நிறுவனம்.

இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அது சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) கையெழுத்தானது.

இந்த முக்கிய முதலீட்டின் மூலம் 600 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழ்நாட்டின் ‘ஆட்டோமொபைல்’ உதிரி பாகச் சூழல் மேலும் வலுவடையும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

அடுத்த தலைமுறை இயந்திரங்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டு நிறுவனத்தின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத மற்றுமொரு சான்றாக உள்ளது,” என முதல்வர் ஸ்டாலின் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்