அத்துமீறிய அன்னபூர்ணாவைத் தோளில் சுமந்த வனக்காவலர்

அத்துமீறிய அன்னபூர்ணாவைத் தோளில் சுமந்த வனக்காவலர்

1 mins read
3c470102-18c6-4d51-b563-13435f09e541
திருவண்ணாமலையின் கீழே இறங்க வழி தெரியாமல் தவித்த பெண்மணியைத் தோளில் சுமந்து செல்கிறார் வனக்காவலர். - படம்: ஊடகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தின்போது அத்துமீறி மலையில் ஏறிய பின், இறங்க வழி தெரியாமல் தவித்த அன்னபூர்ணா என்ற பெண்மணியை வனக்காவாலர் தோளில் சுமந்து மலையின் கீழே இறக்கிவிட்டார்.

தொடர் மழையாக இருந்தாலும் இந்தாண்டு மலையில் மகா தீபம் ஏற்றப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டும் மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலை மகா தீபத்தின்போது மலையேற பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த அன்னபூர்ணா என்ற பெண் அத்துமீறி மலை மீது ஏறியுள்ளார்.

இதையடுத்து திரும்ப வரத் தெரியாததால் இரண்டு நாள்களாக தீப மலை மீது தவித்து வந்துள்ளார். இதனையடுத்து ஒருவழியாக அந்த பெண் இருப்பிடத்தை கண்டுபிடித்த வனக்காவலர் அங்கு சென்று அவரைப் பாதுகாப்பாக மீட்டார்.

கடந்த இரண்டு நாள்களாக உணவு இல்லாததால் சோர்வாக காணப்பட்ட அன்னபூர்ணாவை வனக்காவலர் தனது முதுகில் சுமந்து மலைக்கு கீழே கொண்டு வந்தார்.

வனக்காவலரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பான காணொளியும் இணையத்தில் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்