இந்தூர்: தமிழக முதல்வர் விஜய் பெயரில் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
அந்தப் போலி அறக்கட்டளை மாணவர்களுக்கான கல்விக் கடன், ஏழைகளுக்கு உதவும் நோக்கில் தொழிற்கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன் ஆகியவற்றை வழங்குவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இவ்வாறு பலர் ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடன்களை உடனடியாகப் பெற பதிவுக்கட்டணம், ஜிஎஸ்டி, சரிபார்ப்புக் கட்டணம் என்ற பெயரில், பலரிடம் ஆயிரம் ரூபாய் முதல் ரூ.50,000 வரை வசூலித்துள்ளனர்.
ஏறக்குறைய ரூ.10 லட்சம் வரை இணையம் மூலம் பெற்று மோசடி செய்துள்ள அக்கும்பல், பொதுமக்களிடம் பணத்தைப் பெற்ற பிறகு அவர்களுடனான தொடர்புகளைத் துண்டித்துவிட்டது.
அதன்பிறகு, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இந்தூர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தமிழ்நாடு காவல்துறையின் இணையக் குற்றப் பிரிவின் உதவியும் கோரப்பட்டுள்ளது.


